வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் ஊரகத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியாழக்கிழமை பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், உற்பத்தித் தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீட்டாளர்களுக்கு முழுக் கிரைய விலையிலோ அல்லது 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையிலோ தொழிற் கூடங்கள் - தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.