பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார். 

ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி வந்தார்.

இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார். போலீசார் சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படி அருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், பணி மாறுதலை ரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில் குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல் நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வது சாத்தியமில்லை,'' என்றார்.