பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை

மதுரை:நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக ஆய்வுக் குழு அமைத்து பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் யு.ஜி.சி., தகுதி, அனுபவம் உட்பட பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்.

சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக ஆய்வு குழுவை யு.ஜி.சி., அமைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், யு.ஜி.சி., உறுப்பினர் சவுகானை தலைவராக கொண்டு ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் துரைச்சாமி, டில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பேராசிரியர் ராம்சிங், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டே, மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கமிட்டி ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு பின் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. 750க்கும் மேற்பட்ட பல்கலைகள், 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லுாரிகளின் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பழைய சம்பளக் கமிஷன் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, அனைத்து பல்கலை, கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களை கேட்டு, புதிய சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும், என்றார்.