எம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று 'ரேண்டம்' எண் வெளியீடு

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.


இவற்றுக்கு, மொத்தம், 26 ஆயிரத்து, 313 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவற்றை இறுதிசெய்யும் பணி நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது. 17ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 20ம் தேதி முதற்கட்டகலந்தாய்வு துவங்க உள்ளது.

சமவாய்ப்பு எண்: பிளஸ் 2 தேர்வில், அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. மாணவர்கள், ஒரே, 'கட் - ஆப்' பெற்றிருந்தால், பிறந்த தேதியை வைத்து, முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதி, 'கட் - ஆப்' என, இரண்டும் ஒரே மாதிரி இருந்தால், சிக்கலாகும். இதைத் தவிர்க்க, சம வாய்ப்பு எண் எனப்படும், 'ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது.