அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? - தி ஹிந்து செய்தி.

தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம்உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!அரசுப்பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனைஎளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்தியமரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது.

 
               வேதாரண்யம் பக்கத்தில்உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும்மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்குமூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரைஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும்இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும்படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டுஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்புக்குவேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன்படிக்கும் துணை யாரும் இல்லாத சூழலில்மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசிமாணவனையும் பெற்றோர் வேறு பள்ளியில்சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும்செங்கல் கூடாக மாறியிருக்கிறது. வேறுவழியில்லாமல், பள்ளிக்கூடத்தில்பணியாற்றிய இரு ஆசிரியர்களையும் வேறுபள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு,பள்ளிக்கூடத்தை மூடியிருக்கின்றனர்.
பள்ளிக் கல்வி மேலாண்மைத் தகவல் மையஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் 500பள்ளிகளில் வெறும் ஐந்து குழந்தைகள்மட்டுமே படிக்கின்றனர். அரசின்அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லைஎன்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமார்1,000 பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மட்டும்மூடப்பட்டிருக்கின்றன என்கிறது ஓர்ஆய்வறிக்கை. ராமகோவிந்தன்காடுபள்ளிக்கூடம் ஆயிரத்து ஒன்றாக இருக்கலாம்.இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மூடப்பட்டவெற்றுக்கட்டிடம் சிதிலம் அடையும். ஒருபெருமழை நாளில் உத்திரமும் சுவர்களும்உடைந்து குட்டிச்சுவராகும். புதர்களும்புற்றுகளும் வளரும். பாம்புகள் நுழையும். 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக்கல்வி கொடுத்த அந்தக் கோயில், நம்முடையசுயநல வேட்கையையும் சமூகஅலட்சியத்தையும் பிரகடனப் படுத்திக்கொண்டுபுதர் மண்டிய ஒரு சமாதிபோல் நிற்கும்.இந்தியாவின் 100 பள்ளிகளில் 40 பள்ளிகள்இன்றைக்குத் தனியார் பள்ளிகள். அடுத்த சில10 ஆண்டுகளில் மீதியுள்ள 60 பள்ளிகளும்இப்படிச் சமாதிகள் ஆகலாம்.
பள்ளிக்கூடங்களின் அடிப்படை என்ன?
வெகு நாட்களுக்கு முன் நேரில் கிடைத்த ஓர்அனுபவம் இது. நன்கு படித்த, நல்ல வசதியானபெற்றோர்கள் அவர்கள். நம்மில்பலரையும்போல, அரசுப் பள்ளிக்கூடத்தின் மீதுஅவர்களுக்கும் ஒவ்வாமை. ஊரின் பெரியதனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச்சேர்த்தார்கள். குழந்தை களை உருப்படிகளாகப்பாவிக்கும் சூழலைப் பார்த்து அதிர்ந்து, அடுத்தவகுப்பில் வேறு ஒரு தனியார் பள்ளியில்சேர்த்தார்கள். அங்கும் அதே அதிர்ச்சி. மீண்டும்இன்னொரு தனியார் பள்ளி. தங்கள்குழந்தைகள் சுதந்திரமாக, சந்தோஷமாகப்படிக்க வேண்டும் என்று நினைத்த அவர்களுக்குமீண்டும் அதே அதிர்ச்சி. மாற்றுக்கல்விமுறையில் கற்பிக்கும்பள்ளிக்கூடங்களில் சேர்த்தார்கள். அங் கும்அவர்களுக்குத் திருப்தி இல்லை. கடைசியாக,குழந்தைகள் வீட்டிலிருந்து தானே படிக்கும்சூழலை உருவாக்கினார்கள். குழந்தைகள்அபாரமாகப் படித்தார்கள். சந்தோஷமாகஇருந்தார்கள்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்சமீபத்தில் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. குழந்தைகள் அரசுப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று கேட்டபோது, அந்தப்பெற்றோர்கள் சொன்னார்கள்: “குழந்தைகள்வீட்டிலிருந்து படித்தபோது பாடப்புத்தகங்களில்இருந்த பாடங்களை நன்றாகஉள்வாங்கிக்கொண்டார்கள். ஆனால்,சமூகத்தில் என்ன நடக்கிறது என்றேஅவர்களால் தெரிந்துகொள்ள முடியாமல்போய்விட்டது. சரி, தனியார் பள்ளிகளில்சேர்க்கலாம் என்றால், அங்கும் இதேதானேநடக்கிறது? அவரவர் வசதி, சமூகஅந்தஸ்துக்கு இணையான குழந்தைகளுடன்மட்டுமே படிக்க வாய்ப்புள்ள குழந்தைகளால்அங்கு என்ன கற்றுக்கொள்ள முடியும்?கல்வியின் முக்கிய மான செயல்பாடேசமூகத்தைப் படிப்பதுதான் அல்லவா? ஒரேமாதிரியான மனிதர்களுடன் உரை யாடி,உறவாடும் குழந்தைகளால் எப்படி உலகைப்புரிந்துகொள்ள முடியும்; வாழ்க்கையை எப்படிஎதிர்கொள்ள முடியும்?” - முக்கியமான ஒருகேள்வி இது.
கல்வியின் அடிப்படை இங்கிருந்துதான்ஆரம்பிக்கிறது. அதாவது, ஒரு குழந்தையிடம்உறைந்திருக்கும் ஆற்றலைவெளிக்கொண்டுவந்து சமூகத்தின் வளத்தோடுஅதைப் பொருத்துவதில். சமூகத்தைப்படிப்பதிலிருந்தே அதைக் குழந்தை தொடங்கவேண்டும். சக மனிதனின் இன்னல்களை,துயரங்களைப் பார்த்து ஊற்றெடுக்கும் அன்பும்இரக்கமும் கோபமும் எழுச்சியும்தானே சமூகவிடுதலைக்கான ஆதாரம்?
தலைமுறைகளின் தவம்
ஒரு அரசுப் பள்ளிக்கூடம் என்பது வெறும்செங்கற் களால் மட்டுமா எழுப்பப்படுகிறது?ஒவ்வொரு பள்ளியின் பின்னணியிலும்எத்தனையெத்தனை மனுக்கள்,எத்தனையெத்தனை போராட்டங்கள்?சாலையில் நடக்கும் சக மனிதனின் கால் தடம்,தன் காலில் பட்டால் தீட்டு என்று சொல்லி,அவன் தன் இடுப்பில் துடைப்பம் ஒன்றைக்கட்டிக்கொண்டு தன் காலடிச்சுவடுகளைப்பின்புறமாகக் கூட்டியபடியே செல்ல வேண்டும்என்று உத்தரவிட்டிருந்த சமூகம் இது.சாலையில் எங்கேனும் எச்சிலைத் துப்பிவிட்டால், தீட்டாகிவிடும் என்று கழுத்தில் மண்கலயத்தைக் கட்டிக்கொண்டுதான் நடக்கவேண்டும் என்று சக மனிதனுக்குஆணையிட்டிருந்த சமூகம். இப்படிப்பட்டசமூகச் சூழலில், எல்லாப் பாகுபாடுகளையும்கடந்து, எல்லோர் வீட்டுப் பிள்ளைகளும்சரிசமமாக உட்கார்வதும் படிப்பதும்சாப்பிடுவதும் உரையாடுவதும் உறவாடுவதும்எத்தனை தலைமுறைகளின் நூற்றாண்டுதவம்? இந்தியாவில் எந்த அமைப்பாலும்உருவாக்க முடியாத சமூகநீதி அமைப்பு அரசுப்பள்ளியில் சாத்தியமானது. அந்தஅமைப்புகளைத்தான் இன்றைக்குஒவ்வொன்றாகக் கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறோம்.
அரசு மட்டும்தான் காரணமா?
அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யார் காரணம்?உடனே நம் பார்வை அரசையும்அரசியல்வாதிகளையும் நோக்கிச் செல்லும்.கொஞ்சம் நம் கைகளையும்உற்றுப்பார்க்கலாம். அரசுப் பள்ளிகளின்தோல்விக்கான காரணிகளில் அரசும்அரசியல்வாதிகளும் தவிர்க்கவே முடியாதவர்கள் என்றாலும், அவர்கள் மட்டுமேகுற்றவாளிகள் அல்லர். இன்னும்சொல்லப்போனால், முதன்மைக்குற்றவாளிகள் பெற்றோர்களாகிய நாம்தான்.
நூறு ரூபாய் செலவில்லாமல், ஒரு மணி நேரம்காத்திருக்க வைக்காமல் பிள்ளைகளைச்சேர்த்துக்கொள்கின்றன அரசுப் பள்ளிகள்.கூடவே, பாடப்புத்தகங்கள், புத்தகப்பையில்தொடங்கி சைக்கிள், மடிக்கணினி வரைவழங்குகின்றன. ஆனாலும்,அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்றுகாத்திருந்து, லட்ச ரூபாய் கொடுத்து, படாதபாடுபட்டு தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச்சேர்த்துவிட்டு, பணம்பிடுங்கிகளிடம்மாட்டிக்கொண்டு புலம்பவே துடியாய்துடிக்கிறோம். ஏன்?
அவலப்போக்கின் ஆரம்பம்
அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள்இருக்கின்றன (தனியார் பள்ளிகளைப்போலவே). சீரழிவுக்கு அடிப்படைக் காரணம்என்ன? நம்முடைய பொறுப்பற்றத்தனம். நம்அருகில் இருக்கும் அரசுப் பள்ளி நம் சொத்து;அங்கே பல்லாயிரங்களில் ஆசிரியர்களுக்குக்கொடுக்கப்படும் சம்பளம் நம் வரிப்பணம்;அங்கே நம் குழந்தைகளுக்குத் தரமானகல்வியைக் கொடுக்க வேண்டியது இந்தஅரசாங்கத்தின் அடிப்படைக் கடமை;அதற்காகக் கை உயர்த்திக் கேள்வி கேட்பதுநம்முடைய உரிமை என்ற எண்ணம் நம்ஒவ்வொருவருக்கும் இருப்பின் இந்த நிலைஏற்பட்டிருக்குமா?
சமூகத்தில் யாருடைய குரல்களுக்கு எல்லாம்அதிகாரத்தின் வலு இருக்கிறதோ, அவர்கள்எல்லோரும் இன்றைக்குத் தனியார் பள்ளிகளைநோக்கி நகர்ந்துவிட்டோம். நம்முடையபிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் இல்லை.அங்கே என்ன நடக்கிறது என்பது நமக்குத்தெரியாது. அரசுப் பள்ளிகளுக்கும் நமக்குமானதொடர்பு அறுந்துவிட்டது. எஞ்சி இருப்பவர்கள்சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்கள்.குரல்களற்ற ஏழைகள். காலையில்விடிந்தவுடன் கூலி வேலைக்கு ஓடி, இரவில்வீடு திரும்பும் அவர்களால் யாரை எதிர்த்துக்கேள்வி கேட்க முடியும் அல்லது அவர்கள்கேள்விக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?
தயவுசெய்து கொஞ்சம் நம் கைகளைஉற்றுப்பாருங்கள்… வழிகிறது ரத்தம்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in