பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல்
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி
ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு
வினாத்தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 'புளூ பிரின்ட்' அடிப்படையில்
வினாக்கள் கேட்கப்பட்டாலும், புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும்
கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த, முதல்
பிரிவு மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகினர்.
எனவே, இந்த ஆண்டு கணிதத்துடன் இணைந்த
அறிவியல் பிரிவு மாணவர்களை விட, வெறும் அறிவியல் மற்றும் வணிகவியல்
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, மாநில, 'ரேங்க்' பட்டியலில் முன்னணி பெற
வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு, முதல் மூன்று இடங்களை, வணிகவியல் பிரிவு
மாணவர்களே பெற்றனர்.அதேபோல், அதிக மதிப்பெண் எடுப்பதிலும், வணிகவியல்
பிரிவு மாணவர்கள் சாதிக்க வாய்ப்புஉள்ளது. அதனால், கலை கல்லுாரிகளில்
பி.காம்., படிப்புக்கு இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்படும்.
கூடுதல் இடங்களை தயார்படுத்த வேண்டும்:இதுகுறித்து, பேராசிரியர் சிலர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பி.காம்., 'சீட்'டுக்கு அதிக
போட்டி ஏற்பட்டது. ஆனால், கல்லுாரிகளில் இடம் தான் கிடைக்கவில்லை. சென்னை
பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை போன்ற பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதலாக,
20 சதவீதம் வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த அனுமதி வர தாமதமானதால், தகுதியான பல
மாணவர்கள் அதிக பணம் கொடுத்து, சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்தனர். எனவே,
இந்த ஆண்டு கல்லுாரி நிர்வாகங்கள்,
முன்கூட்டியே பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதல் இடங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.