அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு

அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாகப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக, அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், சிறப்புப் பயிரங்குகளின் முதல்வர்களுக்கு இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


தொழில்நுட்பக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் ஆதார் எண்களும், இணையவழி ஊதியப் பட்டியல்கள் செயல்படுத்துவது தொடர்பான திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன.


எனவே, அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் ஆதார் எண்களையும் அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் பெற்று உடனடியாக இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் ஆதார் அடையாள அட்டைக்குப் பதிவு செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இதனைப் பயன்படுத்தி, ஆதார் எண்ணை இதுவரை பெறாத பணியாளர்கள் உடனடியாக அதற்கு விண்ணப்பித்து ஆதார் எண்ணைப் பெற்று அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.