உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்

  ராமநாதபுரம் :பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
            அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2016 ஜன.,1 ன் படி பாடவாரியாக சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்கள் மட்டுமே இடம்பெற முடியும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.
இதற்கு ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை சான்று அவசியம். இந்த சான்றை பட்டப்படிப்புக்கு பல்கலைகளும், பள்ளி படிப்புக்கு அரசு தேர்வுத்துறையும் வழங்குகின்றன. விண்ணப்பித்த சில மாதங்களிலேயே பல்கலைகள் உண்மைத் தன்மை சான்றை வழங்கி விடுகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறை, அதிகாரிகள் மெத்தனம் போன்ற காரணங்களால் அரசு தேர்வுத்துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 க்கான 
உண்மைத்தன்மை சான்றை உடனடியாக வழங்குவதில்லை. சான்று கிடைக்காததால் பலர் தகுதிகாண் பருவம் முடிக்க முடியாமல் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: உண்மைத் தன்மை சான்று பெற தலைமைஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக தான் அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைத்தோம். என்ன காரணமோ பல ஆண்டுகளாகியும் சான்று கிடைக்கவில்லை. இதனால் பதவி உயர்வு பட்டியலில் சேர முடியாமல் தவிக்கிறோம், என்றனர்.