இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தி: இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தி

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இடைக்கால பட்ஜெட்டில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகும் என்று மிகவும் ஆவலாக எதிர்பார்த்தோம்.

ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் எங்கள் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைஆசிரியர் சங்கமும் கூட்டமைப்பாக செயல்படுவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்

இதற்காக ஒருங்கிணைந்த போராட்டக்குழு ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேலும் எங்களுடைய உணர்வுகளை தமிழக அரசு அலட்சியப்படுத்தாமல், உடனடியாக எங்களை அழைத்து பேசி 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும், மறியல் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும்.

போராட்டம் தீவிரப்படுத்தப்படும்

தற்போது நடைபெறுவதை விட தமிழகம் முழுவதும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுவதுபோல தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம், வட்ட அலுவலகங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (புதன்கிழமை) முதல் போராட்டம் நடத்தப்படும். இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 2 லட்சம் ஆசிரியர்கள் என மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.