அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் கருணாநிதி அறிக்கை

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் வழங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் போனஸ்

கூவம் நதியைச் சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் பெரும் திட்டம், ஆறுகள் இணைப்பு வெள்ளத் தடுப்புப்பணிக்கு ரூ.5,166 கோடி, 3 வழித்தடங்களில் ரூ.8,350 கோடியில் மோனோ ரெயில் திட்டம், ரூ.1,075 கோடியில் நெமிலிச்சேரியையும், மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா, தேர்வாய்க்கண்டிகை, திருக்கண்டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் என கடந்த நிதி நிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயின?

தமிழக அரசு அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள், பொங்கல் விழாவிற்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக போனஸ் வழங்குவதற்கான அறிவிப்பினைச் செய்திட வேண்டும்.

முதலீட்டாளர்கள் மாநாடு

2014-ம் ஆண்டு பிப்ரவரியில் நிதி நிலை அறிக்கையில் படித்த அறிவிப்புபடி அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றதா என்றால் இல்லை.

அதன் பிறகு 2015-ம் ஆண்டு மே மாதத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அன்றைய முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப்பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சி நடைபெற்றதா?

தொழில்கள் வந்ததா?

சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி, அவர் முதல்-அமைச்சராக ஜெயலலிதா வந்த பிறகுதான் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

ஆனால் அந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தவாறு இரண்டு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் வந்தனவா? இல்லை என்பதுதான் வேதனையான பதில்.

நிதிப்பற்றாக்குறை

தி.மு.க. ஆட்சியில் 2010-2011-ம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை 3,396.45 கோடி ரூபாய் ஏற்படும் என்றும், நிதிப்பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப்பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவிகிதமாக இருக்கும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்கு பிறகு வருவாய் பற்றாக்குறையோ, நிதிப்பற்றாக்குறையோ தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட குறைந்திருக்கிறதா? என்று பார்த்தால், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், 2015-2016-ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 4,616.02 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நிதிப்பற்றாக்குறை 31,829.19 கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிடும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1,219.57 கோடி ரூபாயும், நிதிப்பற்றாக்குறை 15,607.06 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை பெருகி விட்டது. வருவாய் பற்றாக்குறையும், நிதிப்பற்றாக்குறையும் அதிகமாகி “பற்றாக்குறை” என்னும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டது தமிழகம். அரசின் கட்டண விகிதங்கள் அதிகமாகி, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் விண்ணளவுக்கு உயர்ந்து விட்டன. இயற்கையால் பெய்த பெருமழையோடு, செயற்கையான வெள்ளமும் இணைந்து மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்டது.

திவால் திசை

ஏழையெளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடியல் வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தமிழகத்தின் நிதி நிலையோ திவால் திசையை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது! ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலச்சாதனை இதுதானா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.