புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'

ராமநாதபுரம்:மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும்
செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன.
2015 செப்., 26 வரை 15.69 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.41,771 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 27.69 லட்சம் ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ரூ.47,231 கோடி செலுத்தப்பட்டது. 4,15,820 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,106 கோடி செலுத்தப்பட்டது.மொத்தம் 93.27 லட்சம் ஊழியர்களிடம் ரூ.98,653 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4.03 ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பிடித்த தொகைக்கான ஒப்புகை சீட்டு மட்டும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புகை சீட்டால் எந்த பயனும் இல்லை என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல்களை பெற்ற திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. ஆணையத்தில் பணம் செலுத்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமாவது (இறப்பு அல்லது ஓய்வு பெறும்போது) பணப்பலன் கிடைக்கிறது.
தமிழக அரசு ஆணையத்தில் பணம் செலுத்தாததால் பணப்பலன் வழங்க முடியாமல் தவிக்கிறது. சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று பணப்பலன் பெற்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித பலனும்
கிடைக்கவில்லை, என்றார்.