இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.

தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தி, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, முற்றுகைப் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர் ஜனார்த்தனன் தலைமையில், அரசுப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



               பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து, அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என, கண்ணப்பன் உறுதி அளித்தார். இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறியதாவது: தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, பி.இ.,-பி.டெக்., படிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், தொழிற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள, 300 தொழிற்கல்வி ஆசிரியர் இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டி, முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்களைப் போல, முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.