மறைந்த 'மக்கள் ஜனாதிபதி' கலாமுக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ஆவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாமின் உடலுக்கு, நேற்று, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், மத்திய - மாநில அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, கண்ணீர் மல்க, நீண்ட வரிசையில் காத்திருந்து, அஞ்சலி செலுத்தினர். துக்கம் தாளாமல் பலர் கதறி
அழுதனர்.மதுரையில் இருந்து அப்துல் கலாம் உடல், ஹெலிகாப்டர் மூலம், மண்டபம் கேம்ப் ஹெலிபேடிற்கு மதியம், 2:25 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, உடலுக்கு முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
ெஜ., சார்பில் மலர் வளையம்
அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன்,
உதயகுமார், சுந்தர்ராஜ், கலெக்டர் நந்தகுமார், எஸ்.பி., மயில்வாகனன் ஆகியோர்
அஞ்சலி செலுத்தினர்.அங்கிருந்து, கலாம் உடல், ராணுவ வாகனத்தில், 18 கி.மீ., தூரமுள்ள ராமேஸ்வரத்திற்கு, 3:45க்கு கொண்டு வரப்பட்டது. உடலுடன் அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் உதவியாளர்கள் வந்தனர்.மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், இரு புறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர். மாணவ,
மாணவியர், இளைஞர்கள் தரையில் விழுந்து வணங்கினர். இதனால், அவரது உடலை சுமந்து வந்த வாகனம் மெல்ல, ஊர்ந்தபடி சென்றது.பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கீழக்காடு மைதானத்தில் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் பன்னீர்செல்வம், அன்வர் ராஜா எம்.பி., உள்ளிட்டோர் அவரது உடலை பெற்றனர்.பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் அப்துல் கலாமின் உடல், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.மேகாலயா கவர்னர், மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பின், அப்துல் கலாம் சகோதரர் முத்துமீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.அப்துல் கலாம் உடலுக்கு மல்லிகை மலர் தூவப்பட்டு, துவா நடந்தது.தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா சார்பில், மலர் வளையம் வைத்து, மாநில அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மும்மத பிரார்த்தனையும் நடந்தது.பல கி.மீ., தூரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சிலர், கதறி அழுதது உருக்கமாக இருந்தது. பெண்கள் அதிகாலை, 5:00 மணிக்கே வந்து வரிசையில் காத்திருந்தனர்.தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர், நேற்று நள்ளிரவு வரை அஞ்சலி செலுத்தினர்.'பாரத் மாதா கீ ஜே', 'மறைந்த மண்ணின் மைந்தன் அப்துல் கலாமுக்கு ஜே' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின், கலாம் உடல், அவர் பிறந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தலைவர்கள் மலரஞ்சலி
பா.ஜ., மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள், காங்., மாநில தலைவர் இளங்கோவன், குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.பி.,க்கள் ராம்பாபு, விஸ்வநாதன், சித்தன், முன்னாள் எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, தலைவர் ஜெகதீசன், ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நடிகர்கள் விவேக், தாமு, வடிவேலு மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
சலசலப்பு
---அப்துல் கலாம் உடல் வருவதற்கு முன்னதாக வந்த மத்திய அமைச்சர்கள், அஞ்சலி செலுத்துவோர் வந்து செல்ல வசதியாக உடலை வைப்பது குறித்து, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் நீண்டநேரம் ஆலோசித்தனர். பின் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து சில ஆலோசனைகளையும்
தெரிவித்தனர்.தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதை படமெடுக்க முடியாதபடி மேடையை சுற்றி போலீசார் மற்றும் அதிகாரிகள் நின்று கொண்டனர். இதனால், போட்டோகிராபர்கள் அவர்களை தள்ளி நிற்கும்படி அடிக்கடி குரல் எழுப்பினர்.

மேடையில் தள்ளுமுள்ளு
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வந்த போது, அவருடன் ஏராளமான தொண்டர்கள் வந்தனர். அனைவரும் மேடையில் ஏற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதேபோல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வந்த போதும், மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் மேடையிலிருந்து கீழே சரிந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் தாங்கி பிடித்து இறக்கினர்.கண்ணாடி பெட்டிக்குள்ளிருந்த அப்துல் கலாம் உடலை, விஜயகாந்த் உற்றுப்பார்த்து கண் கலங்கினார்.- நமது நிருபர் குழு