டி.இ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: மாவட்டக் கல்வி அதிகாரி - டி.இ.ஓ., பதவிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன; மெயின் தேர்வு, ஆக., 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. கல்வித் துறையில், டி.இ.ஓ., பதவியில், 11
காலி இடங்களை நிரப்ப, 2014 ஜூன் 8ம் தேதி, முதல்நிலை எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவு, கடந்த பிப்ரவரியில் வெளியாவதாக இருந்தது; பல காரணங்களால் தள்ளிப் போனது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இதில், 3,127 பேர் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்; மெயின் தேர்வு ஆக., 6, 7 மற்றும் 8ம் தேதி நடக்கிறது. கூடுதல் விவரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.