பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக் கோரும் மனுவைப் பரிசீலிக்க அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 


        கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தைச் சேர்ந்த ஜி.வி.வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. மனு விவரம்:

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை அறிந்து கொள்ள விரும்புவர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம், கல்வித் தரம், பல்கலைக்கழக தர வரிசை ஆகியவற்றை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உரிமை உள்ளது. 



இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. ஆனால், தனியார் கல்லூரிகளின் நிர்பந்தம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் இத்தகைய பட்டியலை வெளியிடுவதை தவிர்க்கிறது. மாணவர்களின் நலன் கருதியே பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. 


கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 


எனவே, நடப்பு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து இரண்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.