'கட் ஆப்' குறைந்தவர்களுக்கு கலை அறிவியல் 'பெஸ்ட்'

இன்ஜினியரிங் கட் ஆப் கடந்த ஆண்டை விடவும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், குறைந்த, கட் ஆப் வைத்திருக்கும் மாணவர்கள், கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்வது நல்லது என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

             தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் சீட்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்களும் கடந்த மே, 6ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில், கணித பாடத்தில், 9,710 பேர் சென்டம் வாங்கியுள்ளனர். இதனால், இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண், 198 முதல், 200 வரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லூரி சீட்களுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, முன்னணி கல்லூரிகளிலும், சிவில் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும், போட்டியிருக்கும். ஆனாலும், இன்ஜினியரிங் கல்லூரிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சீட் இருப்பதால், விண்ணப்பிக்கும் அனைவருக்கும், கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கணிதப்பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், இன்ஜினியரிங் கட் ஆப், மிக குறைவாக வைத்திருப்பவர்கள், கலை, அறிவியல் படிப்புகளை தேர்வு செய்வது நல்லது என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: குறைந்த கட் ஆப் எடுத்த மாணவர்கள், 'மற்றவர்களிடம் பெருமையாக கூற வேண்டும், இன்ஜினியரிங் படிப்புதான் கவுரவம்' என்ற எண்ணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கலை அறிவியல்படிப்புகளை தேர்வு செய்வது உத்தமம். கலை அறிவியல் படிப்தேடு பொறுத்தவரை, இன்ஜினியரிங் படிப்புக்கு செலவழிப்பதை விட, குறைவான கட்டணம், மூன்றே ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியும் உள்ளிட்ட பல்வேறு பாஸிடிவ் வழிகள் உள்ளன. மேலும், கலை அறிவியல் கல்லூரிகளிலும், இப்போது வேலைவாய்ப்புக்கு நிறுவனங்கள் வரத்தொடங்கியுள்ளது. கணிதப்பாடத்தில், மிகுந்த ஆர்வம் கொண்டவர்களும், குறைந்த பட்சம், 140க்கு மேல் கட் ஆப் உள்ளவர்கள், இன்ஜினியரிங் படிப்பில், கல்லூரியையும், பிரிவுகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.