கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்

புதுடில்லி: ''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச்
சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி, லோக்சபாவில் கூறியதாவது: கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி, மூன்றாவது பாடமாக இருந்தது. இது தொடர்பாக, ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனத்துக்கும், நம் நாட்டில் உள்ள நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.


இந்த ஒப்பந்தம், அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக இருந்ததால், ஜெர்மன் மொழிக்கு பதில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெர்மன் - இந்திய அரசுகளுக்கு இடையே சமீபத்தில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, கே.வி., பள்ளிகளில், ஜெர்மன் மொழி, விருப்ப பாடமாக இருக்கும். நம் நாட்டு மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருவதற்காகவும், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மொழியை கற்றுத் தருவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.