ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவுபோலியை ஒழிக்க நடவடிக்கை

ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள்
வழங்கல்துறை எச்சரித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில், ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக, ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கும் என, குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டம், இந்தாண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. ஆதார் அட்டைக்கான 'பயோமெட்ரிக்' பதிவை பயன்படுத்தி, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்படும். அதற்காக, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் அறிவிப்பு, ஜூனில் வெளியாகும். அந்தந்த ரேஷன் கடைகளில், இதற்கான முகாம் நடத்தப்படும்.ரேஷன் கார்டில் ஒருவரது பெயர், இருவேறு இடங்களில் இருந்தாலும், இறந்தவர் பெயர் இருந்தாலும் பெயர் நீக்கம் செய்ய வேண்டும். திருமணமான பெண்களுக்கு, பிறந்த வீட்டில் பெயர் நீக்கம் செய்து, புகுந்த வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.

இருவேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுகளின், ஆதார் எண் ஒரே எண்ணாக இருந்தால், கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது, தானாகவே இரண்டு இடங்களிலும் ரேஷன்கார்டுகள் தற்காலிகமாக ரத்தாகி விடும்.தகுந்த ஆவணம் சமர்ப்பித்து, புதிதாக விண்ணப்பித்து, ஏதாவது ஓரிடத்தில் கார்டு பெற வேண்டியிருக்கும். இருப்பினும், நீண்ட விசாரணைக்குப் பிறகே கார்டு கிடைக்கும். மே இறுதிக்குள் ஒரே பெயரோ, இறந்தவர் பெயரோ இருவேறு கார்டுகளில் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். இதுகுறித்து ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.