அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு, கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 19ம் தேதி துவடங்கி, ஏப்ரல் 10ம் தேதி முடிந்தது. பிளஸ் 2 தேர்வில், சில பாடங்களுக்கான வினாத்தாள்களில், சில கேள்விகள் தவறாக அச்சிடப்பட்டிருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர். அப்படி, தவறாக அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.

அவற்றுக்கு, அரசு தேர்வுகள் இயக்கக துணைத் தலைவரும், தகவல் வழங்கும் அலுவலருமான ஜோ.லூர்து சகாயராணி, பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அச்சுப்பிழையால் ஏற்பட்ட வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தாலேயே, மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு, தவறு இல்லாத வினாத்தாள் தயாரிப்பது மற்றும் பிழை இல்லாமல் அச்சடிப்பது போன்ற நிலைகளில், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.