அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

திருவனந்தபுரம்:கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.


கேரளாவில், காங்கிரசை சேர்ந்த, உம்மன் சாண்டி முதல்வராக உள்ளார். பள்ளிப் பாடங்களை, டி.சி.டி., எனப்படும், 'டிஜிட்டல் கொலாபொரேடிவ் டெக்ஸ்ட்புக்' என்ற முறையில், அறிமுகம் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாட திட்டத்தின் படி, ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடங்கள், டிஜிட்டல் பைல்களாக மாற்றப்பட்டு, அதனுடன் பிற ஒளி, ஒலி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளுமாறு செய்யப்படும்.

'டேப்ளட்' எனப்படும், சிறிய அளவிலான கம்ப்யூட்டர், 'இ-ரீடர்' எனப்படும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களில் தொகுப்பு கருவி போன்றவற்றை பயன்படுத்தி, மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்.அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய கல்வித் திட்டத்திற்காக, டேப்ளட் பிசி, இ-ரீடர் போன்றவை ஏராளமாக வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, இந்த திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய திட்டத்தின் கீழ், 37 லட்சம் மாணவர்களுக்கும், இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.